“சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளது” - ஸ்ரீ காந்த் கைது குறித்து விஜய் ஆண்டனி பரபரப்பு பேட்டி!
விஜய் ஆண்டனியின் 12வது திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்கன்'. அவரின் சொந்த தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான இப்படத்தை லியொ ஜான் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இப்படம் நாளை மறுநாள்(ஜூன்.27) வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் புரமோஷன் நேற்று மதுரையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு பிறகு விஜய் ஆண்டனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மதுரையை பொறுத்தவரை கதைக்களம் அமைந்தால் படம் நடிப்பேன். மதுரை மக்களின் இயல்பு அன்பு, அது மிகவும் பிடிக்கும். எத்தனை ஏஐ வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது. போர் மிகவும் தவறானது. மிகவும் வருத்தமாக உள்ளது. காசாவில் குழந்தைகள் கதறுவது மனதுக்கு வேதனை தருகிறது. போரை அறிவிப்பவர்கள் சண்டை செய்யட்டும். அப்பாவி மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது. நடிகர்கள் நாட்டை ஆளக்கூடாது என விதியல்ல. எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம்2” என்று கூறியுள்ளார். நேற்று முந்தினம் நடிகர் ஸ்ரீ காந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.