“தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சேமிக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியிலிருந்து நகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் உள்ள வீடுகள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள், விடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த தொட்டியில் கடந்த 9 ஆம் தேதி துர்நாற்றம் வீசியது. ஆய்வு செய்த போது தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சடலம் 5 நாட்களாக தொட்டிக்குள் கிடந்துள்ளது. சடலத்துடன் கலந்த தண்ணீர் 5 நாட்களாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடிநீர் தொட்டிகளை தினமும் ஆய்வு செய்து உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும். பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.
ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்யாததால் 5 நாட்களாக சடலம் கிடந்த தண்ணீரை மக்கள் குடிக்க நேர்ந்துள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதும் பொது குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டிகளை தினமும் ஆய்வு செய்யவும், இதில் தவறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீதர், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஆகியோடர் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் போதிய பாதுகாப்பு இல்லாததால் வேங்கைவயல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.