“மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!
நமது மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக்கொள்கை தொடர்பாக அந்த கடிதத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில்,
“நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக்கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது. தேசிய கல்விக்கொள்கை நமது மொழியியல், கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க அமல்படுத்தப்படுகிறது. எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.