மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் எம்ஜிஆர்-ன் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் இ.மகேந்திரன், நீதிபதி, மாணிக்கம், தவசி, ஏ.கே.டி.ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர், திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சி தலைவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற பச்சை பொய்யை சொல்லி சென்றிருக்கிறார்.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய ஆளுநர் உரையை இதுநாள் வரை வெளியிடவில்லை. வாங்கிய கடனை கட்ட வேண்டும் என்றால் இந்த சாமானிய மக்களிடம் தானே வரியை விதிக்க போகிறீர்கள். சொந்த பணத்திலா கடனை கட்டப் போகிறீர்கள்?. இரண்டு நாள் மதுரை, சிவகங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர்.
அருகாமையில் இருக்கும் சிவகங்கையில் மனுவை பெற்ற நீங்கள், பிறந்து வளர்ந்து அகதியாக போய்விடுவோமோ என அஞ்சிக் கொண்டிருக்கும் மேலூர் விவசாயிகளை அழைத்து வாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கையை தருகிறேன். இந்த டங்ஸ்டன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பேன் என சொல்லி இருந்தால் விவசாயிகளின் முதலமைச்சர் என்பது உண்மை.
10 நிமிடத்தில் சந்திக்க கூடிய விவசாயிகளை சந்தித்து நம்பிக்கை ஊட்டி இருக்கலாமே. இந்த மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க தில், திராணி இருக்கா என சவால் விடுகிறேன். நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் ஒப்பந்தத்தை கொண்டு வரும் போதே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள். ஏன் மௌனமாக இருந்தார் என்றால், கரகாட்டகாரன் பட பாணியில் 10 மாத காலம் என்ன செய்தோமோ அதான் இது என்கிறார்கள்.
அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போட்டுள்ளார்கள். எங்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட முடியாது. இப்போது மேலூர் மக்கள் எப்படி அகதிகளாக போய்விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளார்களோ, அதே போல தமிழ்நாடு மக்களும் அகதிகளாக போய்விடுவோமோ என அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் எந்த நாளோ, அன்றுதான் ஜனநாயகம் மலரும் என காத்திருக்கிறார்கள்”. எனப் பேசினார்.