“செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?” - உச்ச நீதிமன்றம் கேள்வி!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள்:-
இந்த வழக்கின் குற்றச்சாட்டு தீவிரம் ஆகும். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? என்பதை கேட்டு தெரிவியுங்கள். செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 212 அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளனர்.
அப்படி இருக்கும்போது அவர்கள் பயப்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்களது கேள்வி, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புகிறோம்.
ஏனெனில் அவர் அமைச்சராக தொடர விரும்பினார் என்றால், வழக்கின் merit-ல் வழக்கை விசாரிக்கலாம். கடந்த முறையே நாங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தோம். எனவே உரிய விளக்கத்தை கேட்டு தெரிவியுங்கள் என செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டனர்.
அமலாக்கத்துறை தரப்பு:-
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் முன்புவரை நேரடியாக, வழக்கு தொடர்பாக வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை. இது அவரது பயத்தை காட்டுகிறது. எனவே தான் ஜாமினை ரத்து செய்ய கோருகிறோம்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் , “செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை கேட்டு தெரிவியுங்கள் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச்.4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.