For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் - இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!

08:33 PM Apr 12, 2024 IST | Web Editor
ஈரான்  இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்   இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்
Advertisement

இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

Advertisement

சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தூதரகத்தில் இருந்த ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டிய ஈரான்,  பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.  ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு காரணமான இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி நேற்று மீண்டும் தெரிவித்தார்.  இந்த பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் தடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை, என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.  ஈரான் தனது பகுதியில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால்,  தக்க பதிலடி கொடுப்பதுடன் ஈரான் மீது நாங்கள் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அங்குள்ள இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும்,  முடிந்தவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement