மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி அளிக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு
மேலும், சிலர் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு பெயின்ட்டை பயன்படுத்தி அழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கிண்டி காந்தி மண்டபம் அருகே திமுக, மதிமுக மற்றும் AISF மாணவரணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் மத்திய அரசு நிதியை முடக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணி செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பங்கேற்றனர்.