திமுக-மதிமுக தொகுதி பங்கீடு: நாளை இறுதிகட்ட பேச்சுவார்த்தை என தகவல்!
திமுக-மதிமுக தொகுதி பங்கீடு குறித்த இறுதிகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி பிப்.24 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் அறிவிக்கப்பட்டார்.
மதிமுக-வினர் இரண்டு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்கள்ளவை தொகுதி வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு திமுக ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கொடுப்பதாக முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், திமுக-மதிமுகவின் தொகுதி பங்கீடு குறித்த இறுதிகட்ட பேச்சுவார்த்தை நாளை (பிப்.27) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.