“பாமகவுடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது” - விசிக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன்!
கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்
நடைபெற்றது. தொகுதி செயலாளர் தியாகு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு, ஜூன் 14ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள, வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் ‘மதச்சார்பின்மை காப்போம்’ எழுச்சி பேரணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வருவதற்கு உண்டான வாய்ப்புகள் இருந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“இது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான ஒரு வன்மமாக பார்க்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து கருத்து கூறியுள்ளார். கூட்டணி வலுவாக உள்ளது. அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வேறு யாருக்கும் இங்கு இடம் இல்லை என தெரிவித்து விட்டார். இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் கருத்து கூறிவிட்டார்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வருகிறது என்றால் அது அவர்களுடைய விருப்பமாக இருக்கும். ஆனால் திமுக தலைமையிலான
அணியில் யாருக்கும் விருப்பம் கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடு அனைவருக்கும் தெரியும். கூடா நட்பு கேடாய் முடியும், அவர்கள் யாருடன் அணி சேர்ந்தார்களோ, அவர்களாலேயே இன்று கட்சி இரண்டாக பிளக்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் பேசக்கூடிய வீடியோ இன்று வைரல் ஆகியுள்ளது. கட்சி துவங்கி தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அதற்குள் தவெகவை சேர்ந்தவர்கள் பிற கட்சியின் தலைவர்களை எவ்வாறு ஒருமையில் விமர்சிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆதவ் அர்ஜுனாவின் அணுகுமுறையால் தான் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். ஆதவ் அர்ஜுனாவிடம் எச்சரிக்கையாக இருங்கள் என விஜய்யை நாங்கள் எச்சரிக்கிறோம்” என தெரிவித்தார்.