தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் - KTR-க்கு அழைப்பு விடுத்த திமுக குழு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் வருகிற மார்ச் 22 தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க கோரி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கான உள்ளிட்ட 7 மாநில அரசியல் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக திமுக-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் அந்ததந்த மாநில அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பை கொடுத்து வந்தனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழ்நாட்டு அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் டெல்லியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
அதன்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ்-க்கு திமுக அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து கே.டி. ராமராவ் அளித்த பேட்டியில், “பல்வேறு அரசியல் கட்சிகளைச் சந்தித்து விவாதிக்க வேண்டிய தளங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருமித்த கருத்து என்பது ஜனநாயகத்தின் அழகு மற்றும் கண்ணியம். யாருடனும் மேடைகளைப் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ரேவந்த் ரெட்டியும் எனது எதிரி அல்ல, அவர் ஒரு அரசியல் எதிரி மட்டுமே. காங்கிரஸுக்கு அதன் சொந்த சித்தாந்தம் மற்றும் கருத்து உள்ளதுபோல் அதன் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கும் உள்ளது. சில நேரங்களில் மோதுவோம், மற்றவற்றில் உடன்படலாம்” என்று கூறியுள்ளார்.