"திமுக அரசு கட்டணங்களையும் உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துகிறது" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் 2023 - 24ஆம் ஆண்டில் திமுக அரசு கடனாக வாங்கிய ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 597 கோடியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.40 ஆயிரத்து 500 கோடியை மட்டுமே மூலதன உருவாக்கத்திற்காக செலவிட்டிருப்பதாகவும், இது திமுக அரசின் மோசமான நிதி நிர்வாகத்தைக் காட்டுவதாகவும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை என்று பாமக தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
சாலைகள், பாலங்கள், பாசனக் கட்டமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சொத்துகளை உருவாக்குவதற்காகவும், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் செய்யப் படும் செலவுகள் மூலதனச் செலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த செலவுகள் மூலம் உருவாக்கப்படும் சொத்துகள் எதிர்காலத்தில் அரசுக்கு வருவாயை ஏற்படுத்தித் தரக்கூடியவை என்பதாலும், அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதாலும் மூலதனச் செலவுகள் அதிகரிப்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இத்தகைய மூலதனச் செலவுகளை செய்வதற்காகத் தான் மாநில அரசுகள் கடன் வாங்க அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், 2023-24ஆம் ஆண்டில் ரூ.1.31 லட்சம் கோடியை கடனாக வாங்கிய திமுக அரசு, அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மூலதனச் செலவுகளுக்கான செலவிட்டு விட்டு, மீதமுள்ள தொகையை அன்றாட செலவுகளுக்கான வருவாய் செலவினங்களுக்கால செலவிட்டிருக்கிறது. ஒரு மாநில அரசு அரசு வருவாய் செலவுகள் அனைத்தையும், வருவாய் வரவுகளுக்குள் முடித்து உபரியை ஏற்படுத்த முடியும். அது தான் உட்கட்டமைப்புகளை உருவாக்க அதிக முதலீடு செய்ய உதவும். ஆனால், திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை வருவாய் உபரியை ஏற்படுத்தவில்லை. இது தான் திமுக அரசின் படுதோல்வி.
வருவாய்ப் பற்றாக்குறையை 2023&24ஆம் ஆண்டில் ரூ.13,582 கோடியாகக் குறைக்க திமுக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது; ஆனால், ரூ.37,540 கோடியாக அதிகரித்தது. 2024&25ஆம் ஆண்டில் ரூ.18,583 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.49,278 கோடியாக அதிகரித்து விட்டது. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஒழித்து, ரூ.1218 கோடி வருவாய் உபரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வருவாய் பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக அதிகரித்து விட்டது. இதை விட மோசமாக நிதிநிலையை எந்த அரசாலும் சீரழிக்க முடியாது.
திமுக அரசு இன்னும் கூட நிதிநிலையை மேம்படுத்தவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கூட ரூ.14,307.74 கோடி மூலதன செலவு செய்ய வேண்டிய திமுக அரசு அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக ரூ.4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த அரையாண்டில் ரூ.28,215 கோடி செலவிட வேண்டிய நிலையில் ரூ.9899 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால், கடனாக மட்டும் செப்டம்பர் வரை ரூ.37,082 கோடியை வாங்கிக் குவித்துள்ளது.
இன்னொருபுறம் 2023-24ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட 1540 திட்டங்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 14,808 கோடி ரூபாய் செலவிடப்படாமல், முழுமையாக மீண்டும் அரசுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் தணிக்கை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. ஒருபுறம் கடனை வாங்கிக் குவிக்கும் திமுக அரசு, அதை சரியாக செலவழிக்காமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது. வீண் செலவுகளை சமாளிக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. திமுக அரசின் இந்த துரோகத்திற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.