"மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு" - எல்.முருகன் குற்றச்சாட்டு
திமுக அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் அரசியல் அம்பலம்!
தமிழ்நாட்டில் இன்று மா விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்னையை மத்திய அரசிடம் தள்ளி விட்டு தப்பி விடலாம் என எண்ணுகிறார். அண்டை மாநிலமான ஆந்திராவில், அம்மாநில அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றி மா விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளது.
இன்றைய தினமலர் நாளிதழில் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழ். மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மா விவசாயிகள் தவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சர் ஊர் தோறும் தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
கட்சியினருடன் சேர்ந்து விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னை என்றாலும் மத்திய அரசு மீது கைகாட்டி தப்பிக்க முயல்வதையே முதலமைச்சர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக? குடும்பம் வளம் கொழிக்க மன்னராட்சி நடத்தும் முதலமைச்சருக்கு மா விவசாயிகளை பற்றி எப்படி கவலை இருக்க முடியும்..?"
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.