"திமுக அரசு சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது" - தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது "சாரி வேண்டாம்... நீதி வேண்டும்" என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், "அஜித்குமார் ஒரு சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனுடன் இணைந்து இவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும், உங்கள் ஆட்சி காலத்தில் 24 நபர்கள் லாக்கப்பில் மரணம் அடைந்துள்ளனர், அவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும்.
சிபிஐ, ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்ததிற்கு பின் உள்ளது அதன் பின் ஒளிந்து கொள்வதற்கு என்ன காரணம், எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து வரும் பதில் சாரி மா மட்டும் தான், திமுக அரசு இப்போது சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது.
இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க. சாத்தான்குளம் வழக்கில் அன்று பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவமானம் என்றார். ஆனால் இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத் தான் மாற்றப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் அவமானம் என்றால் அஜித்குமார் கொலைக்கு என்ன பெயர்?
சாத்தான்குளம் கொலை அவமானம் என்றால், அஜித்குமார் கொலை அவமானம் இல்லையா? அண்ணா பல்கலை, முதல் அஜித்குமார் விவகாரம் வரை நீதிமன்றம் தலையிட்டுள்ளது. நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் பின் நீங்கள் எதற்கு முதலமைச்சர்? உங்கள் ஆட்சி எதற்கு சார்? ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்" என்று பேசினார். தவெக போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.