அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதையொட்டி அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் தொடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார் . சென்னையில் இருந்து சேலம் வரை சுடர் தொடர் ஒட்டம் நடைபெறும். மொத்தமாக 316 கி.மீட்டர் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு மாநாடு வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைவர் இளைஞர் அணியின் மாநாடு பொறுப்பை எனக்கு கொடுத்தது மிகப்பெரிய சவால். அதை நாம் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். இந்த மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுக்கப்படும். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை வேண்டாம் என கோரி மக்களிடம் வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதனையும் திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்.
பின்னர் நேரடியா நானே குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க உள்ளேன். ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.