தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்!
கரூரில் உள்ள தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிக்கும் 2 நாள்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுவது குறித்து எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அதில் எந்த ஆண்டு என்பது குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026 இல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும். 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்.
அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டி காட்ட முடியும். கரூர் மாவட்டத்தில் மணல் கொல்லை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்ய வேண்டும். குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது"
இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.