திண்டுக்கல் | ஊரணியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
நத்தம் அருகே கொசவபட்டியில் ஊரணியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் கோகுல் (13), 5ஆம் வகுப்பு பயின்று வரும் யாதேஸ்வர் (10) மற்றும் 5ஆம் வகுப்பு பயின்று வரும் டாங்லின் இன்பராஜ் (10) ஆகிய மூன்று பேரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கொசவபட்டியில் உள்ள பேபி குளம் என்ற கல் குத்து ஊரணியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
மூன்று பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் மற்ற இருவரும் ஈடுபட்ட நிலையில்,
மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதற்கிடையில், வெகு நேரமாகியும் குளிக்கச் சென்றவர்கள் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது அவ்வழியாகச் சென்றவர்கள், கரையின் மேலே மூவரது உடைகள் இருந்ததைக் கண்டு, ஊரணியின் உள்ளே பார்த்துள்ளனர். ஒருவரின் உடல் மட்டும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் ஊர்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த பொதுமக்கள் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்
அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களின் உதவியோடு, நீரில் மூழ்கிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு நீரில் மூழ்கி இறந்த மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.