பிச்சைக்காரர் வேடத்தில் மனதை வென்றாரா தனுஷ்? - ‘குபேரா’ திரைவிமர்சனம்!
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குபேரா. தலைப்புக்கு ஏற்ப பணம் சம்பந்தப்பட்ட கதை. இன்னும் சொல்லப்போனால் திருப்பதியில் பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ், திடீரென 10 ஆயிரம் கோடிக்கு எப்படி அதிபதி ஆகிறார். அதனால், அவர் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார். கடைசியில் அந்த பணத்தை அவர் தக்க வைத்தாரா? என்ற ரீதியில் புதுமையாக கதை செல்கிறது.
சிபிஐயில் நேர்மையான அதிகாரியாக இருக்கும் நாகர்ஜூனா சில சிக்கலில் மாட்டி சிறைக்கு செல்ல, அவர் வெளியே வர உதவுகிறார் பெரும் கோடீஸ்வரரான ஜிம் சர்ப். பதிலுக்கு அரசின் ஒரு பெரிய எண்ணைய் நிறுவன ஒப்பந்தத்தை கைப்பற்ற, தன்னிடம் இருக்கும் ஒரு லட்சம் கோடி கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கி தர வேண்டும். அதை அரசியல்வாதிகள் சிலருக்கு லஞ்சமாக தர உதவ வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். இதற்காக புது திட்டம் போடுகிறார் நாகர்ஜூனா. திருப்பதியில் பிச்சை எடுக்கும் தனுஷ், மற்ற மாநிலங்களில் பிச்சை எடுக்கும் 3பேர் என 4 பேரை மும்பை அழைத்து வந்து அவர்களுக்கு சில பயிற்சி கொடுக்கிறார்.
அவர்கள் மூலமாக போலி நிறுவனம் தொடங்கி, அந்த நிறுவனம் மூலமாக வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வர திட்டம் போடுகிறார். மற்ற பிச்சைகாரர்கள் நிறுவன கணக்கில் தலா 10 ஆயிரம் வந்தவுடன் அவர்களை வில்லன் ஆட்கள் போட்டுத் தள்ளுகிறார்கள். தனுஷ் மட்டும் தப்பிக்கிறார். அவரை நாகர்ஜூனா மற்றும் வில்லன் டீம் தேட, 10 ஆயிரம் கோடி அதிபதியான தனுஷ் என்ன செய்கிறார். அவர் சிக்கினாரா? என்பது மீதி கதை.
திருப்பதியில் பிச்சை எடுப்பவராக, தனது சக பிச்சைகார நண்பன் மரணத்தை பார்த்து துடிப்பவராக அறிமுகம் ஆகிறார் தனுஷ். அவர் தோற்றமும், உடல் மொழியும் அவரை பிச்சைகாரனாகவே மாற்றி இருக்கிறது. அவரை தங்கள் திட்டத்துக்கு பயன்படுத்துகிறார்கள் நாகர்ஜூனா, வில்லன் டீம். அப்பாவியான தனுஷ் மற்ற நண்பர்கள் கொல்லப்பட்டதை அறிந்த தப்பித்து, ராஷ்மிகா உதவியுடன் சில, பல வேலைகளை செய்கிறார். துரத்தல் தொடர, மனித நேயமுள்ள, மற்றவர்களுக்கு உதவும் மனநிலை கொண்ட அந்த 10 ஆயிரம் கோடி அதிபதியான மாஜி பிச்சைக்காரன் என்ன முடிவெடுத்தான் என்ற திரைக்கதை உணர்ச்சிபூர்வமாக, அதேசமயம் அழுத்தமான சீன்களுடன் நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.
பிச்சை எடுக்கும் நண்பனை பறி கொடுத்து தவிப்பதில் இருந்து தனுஷ் நடிப்பு தொடங்குகிறது. பின்னர், நாகர்ஜூனாவை நம்பி ஏமாறுவது, அவரிடம் அப்பாவியாக பல கேள்விகள் கேட்பது, ராஷ்மிகா நட்பு, தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிவது, கடைசியில் பல அதிரடி முடிவுகள் எடுப்பது என சீனுக்கு சீன் மிரட்டியிருக்கிறார் தனுஷ். குறிப்பாக பல சீன்களில் பிச்சைகாரர்கள் பற்றி சிந்தித்து, அவர்கள் மனநிலையில் யோசித்து, அவர்களுக்காக உதவி செய்து பிச்சைக்காரனாகவே வாழ்ந்து இருக்கிறார். அவருக்கு விருதுகள் பல கிடைக்க வாய்ப்பு.
நேர்மையான, நல்லவராக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக பல செயல்களை செய்து குற்ற உணர்ச்சியில் தவிப்பவராக முத்திரை பதித்து இருக்கிறார் நாகர்ஜூனா. வில்லனாக வரும் இந்தி நடிகர் ஜிம் சர்ப் தனது தனித்துவமான உடல் மொழி, நடிப்பால் கலக்கியிருக்கிறார். சராசரி பெண்ணாக அறிமுகம் ஆகும் ராஷ்மிகா கூட, கிளைமாக்ஸ் உட்பட பல இடங்களில் தனது டயலாக், நடிப்பால் மிரட்டி இருக்கிறார். இவர்களை தவிர தனுஷின் சக பிச்சைகாரர்களாக வரும் அந்த 3 பேர், பிச்சைகார தாத்தாவாக வரும் கே. பாக்யராஜ் மனதில் நிற்கிறார்கள். சுனைனா வந்து போகிறார்.
திருப்பதி, மும்பை, மகாராஷ்டிராவின் சில இடங்கள், சேசிங் சீன், குப்பை கூடம் என பல விஷூவல்களை அழகாக கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகித் பொம்மி. போய் வா நண்பா பாடல், தத்துவ பாடல் என ஸ்கோர் செய்து இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். ராஷ்மிகா திறமையை வெளிப்படுத்த ஒரு பாடல் கூட இல்லாதது வருத்தமே. பண பரிமாற்றம், கறுப்பு பணம் சம்பந்தப்பட்ட சீன்களை இன்னும் எளிமையாக்கி இருக்கலாம். குபேரா என்பது தலைப்பு ஆனாலும், பிச்சைக்காரர்கள் உலகம், அவர்களின் மனநிலை ஆகியவற்றை அழுத்தமாக காண்பித்து, பல சீன்களின் கலங்க வைக்கிறார் இயக்குநர். குறிப்பாக, பல பிச்சைகாரர்கள் முகம், பிச்சை எடுக்கும் சீன்கள் மனதில் நிற்கிறது. ஏழைகளுக்கான ஆதரவு வசனங்கள் நச். தனுஷ் கேரக்டருக்கும், பல ஆன்மிக தொடர்புக்குமான சீன்கள், இசை மெய்சிலர்க்க வைக்கிறது.
படத்தின் நீளம், பல இழுவை காட்சிகள், எடிட்டிங் சரியான இடத்தில் இல்லாதது படத்தின் மைனஸ். பிச்சைகாரர்களின் உலகம், கோடீஸ்வரர்களின் மறுபக்கம் என இரண்டையும் காண்பித்த இயக்குநர், இன்னும் கொஞ்சம் அழுத்தமான சீன்களை கொடுத்து இருக்கலாம். கிளைமாக்ஸ் உட்பட பல விஷயங்களை இன்னும் உணர்ச்சி பூர்வமாக மாற்றி இருக்கலாம். ஆனாலும், இந்த உலகம் அனைவருக்குமானது. பணத்தை தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது. நேர்மை, மனித நேயம் போற்றப்பட வேண்டும், ஏழைகளின் உலகத்தை பணக்காரர்கள் பார்க்க வேண்டும் என்ற இயக்குநரின் பார்வை, தனுஷ் நடிப்புக்காக குபேராவை பார்க்கலாம்”
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்.