For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய் மீது தவாகவினர் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார்!

தவெக தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார்.
05:20 PM Jun 11, 2025 IST | Web Editor
தவெக தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார்.
விஜய் மீது தவாகவினர் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார்
Advertisement

கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரிசுகளை வழங்கி, கௌரவப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Advertisement

பரிசுகள் வழங்கும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜய்யை கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பது அண்ணா என்று அழைத்து தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இதுகுறித்து சமீபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

“இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. பெத்தவங்க ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறாங்க. இன்னும் ஓரிரு மாசத்துல பிளஸ் டூ முடிச்சு, டிகிரி முடிக்க போற கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு. பெத்து வளத்து ஆளாக்கிய பொண்ண... நாளைக்கு மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பொண்ணு.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது.. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படிலாம் செய்யக் கூடாது” எனப் பேசினார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

வேல்முருகனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து இதுதொடர்பாக வேல்முருகனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்தார்.

அவர்மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்ற தவெகவின் புகாரையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சபாநாயகர் ஆகியோருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் சிவமூர்த்தி, விஜய் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில்,

“நடிகர் ஜோசப் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு, ஜூன் 28-ம் தேதி திருவான்மியூரில் நடந்த பள்ளி பொது தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், மாணவிகளை அழைத்து அவர்களை அணைப்பதும், அனுமதியின்றி தொடுவது மற்றும் முறைகேடாக நடந்தது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதை பல கோடி மக்கள் பார்த்து பெண் குழந்தைகளை தொடுவது தவறில்லை என்று கருதி தொடக்கூடும். இதனால் சமுதாயத்தில் இளைஞர்களும், மற்றவர்களும் நடிகர் ஜோசப் விஜய் செய்கையை பார்த்து அதேபோல் செய்ய முற்படுவார்கள். அதனால் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் மற்றும் காலாசார சீர்கேடு ஏற்படுவது மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது என்றால், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகபெரிய கேள்வி குறி ஆகிவிடும். ஆதலால் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement