“கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது” - திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதில் தந்த்ர சமுச்சீயம், கேரள சம்பிரதாய ஆகமம், மற்றும் குமார தந்திரம் ஆகமம் ஆகியவை பின்பற்றப்படும். இந்நிலையில், கோவில் புதுப்பிக்கும் பணிகளுக்கு அனுமதி அளித்த குழுவில், ஆகம நிபுணர்கள் இடம்பெறவில்லை. மேலும், கரையோர கட்டுப்பாட்டு மண்டல (CRZ) அனுமதி இல்லாமல் கோவில் வளாகத்தில் பகுதியில் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
கோவிலில் இருந்த 24 புனித தீர்த்தங்கள் கல் தூண்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளால் காணாமல் போயுள்ளன, அவை மீண்டும் நிறுவப்பட வேண்டும். கோவில்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சடங்குகளுக்கு முரணாகவும், திருக்கோயில் நிதியை தவறாகவும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே ஆகம நிபுணர்கள் அடங்கிய புதிய குழு நியமிக்காமல், 24 தீர்த்த தூண்கள் மீட்டமைக்கப்படாமல், திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்க வேண்டும். ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் ஊற்ற அனுமதிக்கப்படக்கூடாது, கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணி பணிகளை முறையாக கண்காணிக்க ஆகம நிபுணர்களின் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வில் இன்று(ஜூன்.18) நடைபெற்றது. அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை கண்காணிக்க நீதிமன்ற உத்தரவின் படி ஆகம நிபுணர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அல்லது புனித நீர் ஊற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது” என வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதிகள், “கோயில்களில் உள்ள பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது, அதனை களைய நடவடிக்கை எடுங்கள். பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என்று கருத்து தெரித்தனர். அத்துடன் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை அணுக உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.