வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் உதவிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திருவாரூர் பழவனக்குடி பொதுமக்கள் ஐந்து பேர் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நிலையில், 6 மணி நேரத்தில் அவர்களின் கோரிக்கையை துணை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழவனக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருடன் இன்று (6.3.2025) காலை கலந்துரையாடினார். அப்போது, அங்கு வருகை தந்திருந்த பழவனக்குடி பொதுமக்களில் ஐந்து பேர் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணம். திவ்யா ராஜு. நாகராஜ் முருகையன், ஸ்டாலின் சௌந்தரராஜன், சுகன்யா மேகநாதன் உட்பட 4 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் வீடு கட்டுவதற்கான நிதியுதவியை வழங்கும் வகையில் அதற்குரிய ஆணையையும், சுகன்யா மேகநாதனுக்கு வீட்டு மனைப்பட்டாவையும், இன்று மாலையே துணை முதலமைச்சர் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் நேரில் வழங்கினார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்த 6 மணி நேரத்துக்குள் தீர்வை ஏற்படுத்தி உடனுக்குடன் வீடு கட்ட நிதியுதவியும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்கியமைக்காக பயனாளிகள் ஐவரும் தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.