கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு!
கோவையில் வரும் 18 ஆம் தேதி நடைபெற இருந்த பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் சார்பில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களுக்குச் சென்று தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 5 முறை வருகை தந்துள்ளார். அந்த வகையில் , கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், பிரதமரின் வாகன பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களுக்காக வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழுவுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, கோவை மாநகர காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.