”டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது”- அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி..!
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் உயர் மருத்துவ உபகரணம் (DEXA ஸ்கேன் கருவி) திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்,
“முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டமைக்கப்பட்டு உள்ளது. திமுக அரசு பொறுப்பு ஏற்றப்பட்ட பின் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 419 கோடி ரூபாய் அளவிற்கு திட்டப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் தேவையான மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். வடகிழக்கு பருவமழைக்கு இந்தாண்டு 25,460 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 10,48,000 மக்கள் பயன்பெற்று உள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர், 9 பேரும் டெங்குவால் மட்டும் பாதிக்கவில்லை இணை நோய்கள் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அரை குறையாக தான் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின்பு தான் மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் முழுமையாக நிறைவு பெற்று செயல்பட்டு வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். திமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிலம் மாற்றி வழங்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 200 மாணவர்கள் இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஒரு ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்றால் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலேயே மருத்துவப் படிப்பை முடிக்கக்கூடிய சூழல் ஏற்படும். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என நம்புவோம்” என்று தெரிவித்தார்.