“தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” - கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்துள்ளார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே மத்திய அரசு! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.