டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்!
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
“டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிராத்திக்கிறேன்”
பிரதமர் மோடி
“டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தேன்"