“விவசாயி சின்னத்தை நிச்சயம் திரும்ப பெறுவோம்” - சீமான் உறுதி
“நிச்சயமாக விவசாயி சின்னத்தை திரும்ப பெறுவோம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்த போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி அப்போது முதலே கரும்பு - விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகின்றது. ஆனால், இம்முறை அக்கட்சிக்கு அந்த சின்னம் பெற சற்று சிக்கல்கள் எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை 11 மாநிலங்கள் அதாவது தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் அக்கட்சி போட்டியிட போவதாகவு தகவல் வந்துள்ளது.
இந்நிலையில், த மிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான களப்பணிகள் ஆகியவற்றைத் திட்டமிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும். திட்டமிட்டபடி கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு இருக்கிறது. தனியாக வேளாண்மை பற்றித் தாக்கல் செய்தால் ஒன்றும் இல்லை. நிலத்தில் இறங்கி வேலை செய்ய ஆள் இருக்கா? சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். நிச்சயமாக விவசாயி சின்னத்தை திரும்ப பெறுவோம். கர்நாடகாவை மேகதாதுவில் அணையைக் கட்ட விட கூடாது. இந்த மாத இறுதியில் வேட்பாளர் நாதக கட்சி அறிமுக கூட்டம் நடைபெறும்” என அவர் தெரிவித்தார்.