அரசியல் சாசனம் மீதான விவாதம் | திமுக எம்பிக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - கொறடா உத்தரவு!
திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றும், நாளையும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, அதானி குழுமத்துக்கு சாதகமாக பாஜக செயல்படுவதாகவும், மணிப்பூர் வன்முறையை தடுக்க மத்திய அரசு தவறியதாகவும் கூறி பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து, ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருவதால், அவையின் பெரும்பாலான அலுவல்கள் முழுமை பெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான அரசியல் சாசனம் மீதான விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார். மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 பேர் பங்கேற்று பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இறுதியில் பிரதமர் மோடி பதிலளிப்பார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்த விவாதம் நடைபெற உள்ளது. மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, இந்த சிறப்பு விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.