வயநாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகள் - மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் இருந்தும் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிலச்சரிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
" வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். இந்த நிலச்சரிவு சம்பவத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினேன் விவரங்களை கேட்டறிந்தேன்.
வயநாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மத்திய அமைச்சர்களிடம் பேசுவேன். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.