Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

09:39 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

Advertisement

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்து விடாததால் பயிரிடப்பட்ட குறுவைப் பயிர்கள் கருகின. குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யாததால், கருகிய மற்றும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு பெற முடியவில்லை. உயர்த்தப்பட்ட (NDRF) பேரிடர் நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000/- என்று மத்திய அரசு உயர்த்தி அறிவித்ததைக்கூட வழங்காமல், திமுக அரசு ரூ.13,500/- மட்டும் வழங்கி டெல்டா விவசாயிகளை வஞ்சித்தது.

இந்த ஆண்டு ஜூன் 12-ல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாத நிலையில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதைக் கண்டுகொள்ளாமல் அவசர கோலத்தில் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் உள்ள குறைகளையும், பயிர்க் காப்பீடு அறிவிக்கப்படாததையும் குறிப்பிட்டு, உடனடியாக இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு மேற்கொள்ளப்பட வேண்டியவைகளை பட்டியலிட்டு கடந்த 15.6.2024 அன்று விரிவான அறிக்கையை வெளியிட்டேன்.

அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பாதிக்கப்பட்ட பாசன பரப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூக்குரலிட்டதை டெல்டா விவசாயிகள் மறக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000/-த்தை உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்;

குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும் என்றும்; குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால், வேளாண் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு குறுவை பயிர் காலத்திற்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதத்திற்கு ரூ.5,000/- நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்;

இந்த வறட்சியால் கால்நடைகளுக்கு வைக்கோல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வினால் விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை தொடர்ந்து செய்ய இயலாத சூழ்நிலை எற்பட்டுள்ளது. எங்களது ஆட்சிக் காலத்தில் வறட்சி ஏற்பட்டபோது விலையில்லா வைக்கோல் தீவனம் வழங்கினோம். எனவே, விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என்றும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ADMKCMO TamilNaduDeltaDMKedappadi palaniswamifarmersMK StalinNews7Tamilnews7TamilUpdatesTN Govt
Advertisement
Next Article