கடலூர் பள்ளி வேன் விபத்து - தவெக தலைவர் விஜய் இரங்கல்!
கடலூரில் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த வேன் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தனியார் பள்ளி வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அக்கா, தம்பி உள்பட பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மாணவர் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும்…
— TVK Vijay (@TVKVijayHQ) July 8, 2025
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது,
"கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.