பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
பழனி முருகன் கோயிலில் விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனைத்தொடர்ந்து இது கார்த்திகை மாதம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், மேலும் ஐயப்ப பக்தர்கள் வருகையாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
இதனால் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்தும், மேலும் மலைக்கோயிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் வரை காத்திருந்தும் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் வகையில், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.