பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா - ஆளுநர் ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஜன.10ஆம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்று இருந்தன.
அதன்படி பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு பிணை கிடையாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.