For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹாலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது கூட்டணிக்கட்சி!

09:20 AM Jul 04, 2024 IST | Web Editor
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹாலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது கூட்டணிக்கட்சி
Advertisement

நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் திரும்பப் பெற்றது. 

Advertisement

பிரசண்டா தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்குப் பதிலாக புதிய அரசு அமைப்பதற்காக நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) தலைவர் கே.பி.சா்மா ஓலி ஆகியோர் இடையே கடந்த 1ம் தேதி இரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பிரசண்டா தலைமையிலான அரசு கவிழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள்ள பிரசண்டா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தலைநகர் காத்மாண்டில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

"நாட்டின் இரு பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரதமா் பதவியிலிருந்து பிரசண்டா விலக வேண்டும். அவா் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டப்படி புதிய அரசு அமைக்கப்படும்" என்றார்.

இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஎன்-யுஎம்எல் கட்சி பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று திரும்பப் பெற்றதாக அந்த கட்சியின் பிரச்சார கமிட்டி துணைத் தலைவர் விஷ்ணு ரிஜல் தெரிவித்தார். பிரசண்டா தலைமையிலான அமைச்சரவையில் துணைப் பிரதமர் உள்பட 5 அமைச்சர் பதவிகளை சிபிஎன்-யுஎம்எல் கட்சி வகித்து வருகிறது. இவா்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர்.  நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது.

இதையும் படியுங்கள் : இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

இந்த ஆண்டுகளில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொண்டு ஆட்சி நடத்துவது என நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக சிபிஎன்-யுஎம்எல் தலைவர் சர்மா ஓலி பிரதமராக இருப்பார். அடுத்த கட்டத்தில் நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா பிரதமர் பதவியை வகிப்பார். பிரதமர் பிரசண்டாவுக்கும், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவர் கே.பி.சா்மா ஓலிக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததையடுத்து, பிரசண்டாவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக சிபிஎன்-யுஎம்எல் அறிவித்துள்ளது.

275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 89 எம்.பி.க்கள் உள்ளனர். சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 எம்.பி.க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 138 இடங்களே தேவை எனும் நிலையில், இந்தக் கூட்டணிக்கு 167 எம்.பி.க்கள் உள்ளனர். பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் கட்சிக்கு 32 எம்.பி.க்கள் உள்ளனர்.

Tags :
Advertisement