விஜயை கண்டித்த நீதிமன்றம் - இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே, ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துகொண்டிருக்கும்போதே, கட்சித் தொண்டர்களை விட்டுவிட்டு நிர்வாகிகள், தலைவர்கள் ஓடிவிட்டனர். ஒருவர் கூட, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவில்லை. கூட்டம் அதிகம் கூடும்போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கைகளாக விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் கட்சியினர் பின்பற்றவில்லை.
சம்பவத்துக்காக வருத்தம் கூட தெரிவிக்காததே, கட்சித் தலைவரின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. தவெக தலைவருக்கு தலைமைப் பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. விஜய் பிரசார வாகனம் மோதிய போதுகூட, விஜய் வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. என்ன மாதிரியான கட்சி இது? கருல் நடைபெற்றது மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு” என்று நீதிபதி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு எந்தவொரு மனுவும் அளிக்கப்படவில்லை என்றும், விஜய் தரப்பு வழக்கறிஞர் இல்லாமல் மனதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே இந்த வழக்கில் ஆஜராகி இருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவு நகல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும், விஜய் தரப்பு வழக்கரிஞர்களின் வாதத்தையும் கேட்டு இருக்கலாம் என்றும் விஜய்க்கு அநீதி நடந்துவிட்டதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.