அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்களை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தும்போது தனிப்படை காவலர்களால் தாக்குதலால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியது.
இதனை தொடர்ந்து, தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் தமிழக அரசால் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் 22ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, மதுரை மாவட்ட
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 5 தனிப்படை காவலர்களுக்கும் ஆகஸ்ட் -13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்திருந்தது.
இதனிடையே மதுரை மத்திய சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி செல்வபாண்டி முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி 5 தனிப்படை காவலர்களையும் 2 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும் ’இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் விசாரணை முடித்துவிட்டு நாளை மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும், விசாரணையின் போது எந்தவித துன்புறுத்தலில் ஈடுபடுத்தக்கூடாது, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது மருத்துவ சான்றுடன் ஆஜர்படுத்த வேண்டும்’ எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட தனிப்படை காவலர்களும் , மறுத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.