நாட்டின் நீளமான கடல் பாலம் | திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது என்ற பெயரில் மும்பையில் பெயரிடப்பட்டுள்ள பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
மும்பை டிரான்ஸ் துறைமுகத்தை இணைக்கும் இந்த பாலமானது 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் மிக நீளமான கடல் பாலமாக இறுதி வடிவம் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் நேரத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை அளிக்கும் வகையில் அடல் சேது என பாலத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடல் சேது என்பது மும்பையில் உள்ள செவ்ரி மற்றும் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நவா ஷேவா பகுதியை இணைக்கும் 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள பாலமாகும்.
நாட்டின் மிக நீளமான பாலத்தின் உதவியுடன், செவ்ரி-நவ ஷேவா ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான பயணம், இரண்டு மணிநேரத்தில் இருந்து சுமார் 15-20 நிமிடங்களாக குறைய உள்ளது. இந்த பாலத்தில் பயன்படுத்தப்படும் விளக்குகள் நீர்வாழ் சூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வேறு எந்தவொரு கடல் பாலத்திலும் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்கள், இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.