மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - ஹாங்காங், சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. இந்த நிலையில் இந்த வைரஸ் மீண்டும் தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மே முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பிரபல பாப் பாடகர் ஈசன் சானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரின் இசை கச்சேரி நிகழ்வும் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே போல் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை சுமார் 14,200 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தோராயமாக 30% அதிகரித்துள்ளது. இதே போன்று தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.