இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு... எந்த மாநிலம் முதலிடம்? உயிரிழப்பு எண்ணிக்கை இத்தனையா?
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (ஜுன் 8) தெரிவித்தது. அதன்படி, இந்தியாவில் 6,133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 769 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளன. சமீபத்திய உயிரிழப்புகளுடன் சேர்த்து ஜனவரி முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்ச இறப்புகள் (18) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கேரளா (15) மற்றும் டெல்லி (7) உள்ளன.