For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து - பாஜக அமைச்சர் மன்னிப்பு!

கர்னல் சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
07:54 AM May 14, 2025 IST | Web Editor
கர்னல் சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து   பாஜக அமைச்சர் மன்னிப்பு
Advertisement

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

Advertisement

இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்த நிலையில் தொடர்ந்து போர் பதற்றமும் ஏற்பட்டது. தற்போது இரு நாடும் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் சற்று குறைந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம்.

எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் பிரதமர் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.

கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். பஹல்காம் தாக்குதலால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது குடும்பம் இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளது.

நான் சோகமான இதயத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால், 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement