மாறி மாறி ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் - தயார் நிலையில் பாகிஸ்தான் முப்படை!
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் தங்களின் தாயகம் செல்ல வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன் சிந்து நதி ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்தது.
அதற்கு பதில் நடவடிக்கை தரும் வகையில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க தடை விதித்து. மேலும் இந்தியாவுடனான அனைத்து வகையான வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்து, சிந்து ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை ஒரு போர் செயல் என்று பாகிஸ்தான் அரசு கூறியது.
இந்தநிலையில் சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. 1972 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த சிம்லா ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதே நோக்கமாகும். சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள பாகிஸ்தான் அரசு தங்களின் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.