தொடர் கனமழை - காரையார் அணை நீர்மட்டம் உயர்வு ... விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பிரதான அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையார் அணை நீர்மட்டம் 108.1 அடியிலிருந்து ஒரே நாளில் சுமார் 5 அடி உயர்ந்து 113.5 அடியை தாண்டியுள்ளது. அணைக்கான நீர்வரத்தானது 1,883.3 கன அடியிலிருந்து 4,898 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
இதேபோல் உச்ச நீர்மட்டம் 156 அடி கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.84 அடியிலிருந்து ஒரே நாளில் சுமார் அடி 6 உயர்ந்து 142.91 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து ஒரு வார காலமாக பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தென்மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.