இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அடுத்த வாரம் விசாரணை!
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிய முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதாக தேர்தல் ஆணையத்திற்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வரும் ஜூன் 19ஆம் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
மேலும் 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே இரட்டை இலை சின்னம் உச்ச நீதிமன்றத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டது என்றும் அதற்கு மேல் எடப்பாடி பழனிசாமி அல்லது எந்தப் பிரிவிலும் உள்ள எவரும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் சார்பாக தேர்தல் படிவங்களில் கையெழுத்திட அதிகாரம் இல்லை எனவும் மனுவில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்க பட்டியலிடப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது