திமுக - மநீம கட்சிகளுக்கு இடையேயான தொகுதி உடன்பாடு - பிப். 28-ம் தேதிக்குள் கையெழுத்தாக வாய்ப்பு!
பிப். 28-ம் தேதிக்குள் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று (பிப். 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இன்று (பிப். 25) மாலை 5.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தொடர்ந்து நாளை (பிப். 26) தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், பிப். 28-ம் தேதிக்குள் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
வரும் 29-ம் தேதி கமல்ஹாசன் THUG LIFE படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டு மார்ச் 10-ம் தேதி தான் சென்னை திரும்ப உள்ளார். அதனால் 28-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வெளிநாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.