அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா - அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளான ஜன. 22 (திங்கள்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதனை 'தேசிய விழா' என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஜனவரி 22-ம் தேதி மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.