"வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும்" - சோனியா காந்தி
"வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும்" என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை பெற்ற நிலையில், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நாளை (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி முன்மொழியப்பட்டதாகவும் அதற்கு இன்னும் நேரம் வேண்டும் எனக் கூறி மறுத்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் சோனியா காந்தியே எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வகிப்பார் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவருக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படும்.
“ மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறும் பிரச்சாரம் செய்த மோடி, தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக அவர் மீண்டும் பிரதமராக நாளை பதவியேற்கும் முனைப்பில் உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தான் கூறியபடி 400 இடங்களை பெறவில்லை. இதனால் அவர் தார்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுவிட்டார். இதன்மூலம், தலைவராகும் தகுதியை, உரிமையை இழந்துவிட்டார். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் செய்துகொள்வார் என்றோ, மக்களின் மனநிலையைப் புரிந்து நடப்பார் என்றோ நாம் எதிர்பார்ப்பது தவறு.