“செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்”- ஓ.பன்னீர்செல்வம்!
வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர்,
”எம்ஜிஆர் இயக்கத்தை துவங்கிய நாளிலிருந்து இயக்கத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் செங்கோட்டையன். அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுகவை வளர்க்க உதவியவர். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கழகம் ஒருங்கிணைக்க வேண்டும்; 'ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்' என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார்
அதிமுகவின் சக்திகள் பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். அவரது எண்ணம் நிறைவேற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்"
என்று கூறினார்.
முன்னதாக இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.