மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3,076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டு உள்ளனர். 534 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரியும், மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் முன்பு இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ., செ.முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் 6 மாவட்டங்களை சார்ந்த மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீனவ மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.