தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் - டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் நமஸ்தே திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குறிப்பாக இந்த முறைகேட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், திட்டப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்று அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எதிராக DALIT INDIAN CHAMBERS OF COMMERCE AND INDUSTRY தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.