ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு... மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (42). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி . இவர் குருவராஜபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் மகள், 5 வயதில் மகன் உள்ளனர்.
தினகரன் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உடையவர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியில் ரூ. 25 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்த 25 லட்சம் ரூபாயை அடைக்க வீட்டுக் கடன் மற்றும் நகை கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தெரிந்தவர்களிடமும் கடனாக பணத்தை வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
அந்த பணமும் போதாத நிலையில் கடன் செயலிகளில் கடன் வாங்கியதும் தெரிய
வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் கடன் பிரச்சனையை தீர்த்து விட்டு வருமாறு சொல்லி தற்காலிகமாக அவரை பணியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளனர். ரம்மியால் பணத்தை இழந்தது மட்டுமின்றி, கல்லூரி நிர்வாகமும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்த நிலையில் சித்தேரி பகுதியில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவர் சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஆர்பிஎப்
போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.