பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழப்பு!
மலேசியாவின் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்குச் சொந்தமான ஒரு வளாகம் ஜெர்டேவிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள மாணவர்கள் சிலர் பேராக்கில் உள்ள பிரதான வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதறகக பேருந்தில் புறப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து எல்லையில் உள்ள கெரிக் நெடுஞ்சாலை அருகே கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி முன்னால் சென்ற கார் மீது மோதியுள்ளது. இதில் பேருந்து மற்றும் கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.