ஹர்திக் பாண்டியாவுடன் மோதலா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்... அன்பை பரிமாறிய ஹர்திக்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்றிரவு (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்தார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்களே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக ஒவ்வொரு போட்டியின்போதும் டாஸ் போடப்பட்ட பின் இரு அணியின் கேப்டன்களும் கை குலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டத்தில் டாஸ் போட்ட பின் ஹர்திக் பாண்ட்யா கை கொடுக்க வந்தபோது, சுப்மன் கில் விலகி சென்றுவிட்டார். மேலும், இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தபோது ஹர்திக் பாண்டியா, அவரது அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் இந்திய அணியின் முன்னணி வீரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே ஈகோ மோதல் உள்ளதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஹர்திக் பாண்ட்யாவுடன் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இணைத்து 'அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்' என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். சுப்மன் கில்லின் ஸ்டோரியை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியா 'Always Subbu Baby' என பதிவிட்டுள்ளார்.